Thursday, November 12, 2009

நிரந்தரம்மின்றி தவிக்கிறது

எல்லாமே மாறிப்போயுள்ளது

நிரந்தரம்மின்றி தவிக்கிறது

அன்று ஆத்மாக்கள் தினம்

மாமாவின் கல்லறை போய் பார்த்தேன்

ஓங்கி வளர்ந்த பன்னீர் மரம்

பூக்களை இரைந்து போட்டிருந்தது

உறவுகள் வந்து அழுதிருக்கிறார்கள்

சிலுவையின் அடியில் மெழுகுகள்

உருகி வடிந்து ஓடியிருக்கிறது

எல்லாமே மாறிப்போயுள்ளது

நிரந்தரம்மின்றி தவிக்கிறது

கைப்பேசியில் மாமாவின் எண்

இன்றும் அழிக்காமல் உள்ளது

அழுத்திப் பார்த்தேன் திரும்ப திரும்ப

தொடர்புக்கு வெளியே உள்ளார் என

உண்மையே பதிலாக வந்தது

எல்லாமே மாறிப்போயுள்ளது

நிரந்தரம்மின்றி தவிக்கிறது

மாமாவின் வீட்டிற்கு போனேன்

மெல்லியதான குரலில்

கீரீச்சிட்டு அழுதது

துருபிடித்த கிரில் கேட்

பனியில் நனைந்த பூக்கள்

அழுதது போல தலை கவிழ்ந்து

நீர் சொட்டியது வாசலில்.

எல்லாமே மாறிப்போயுள்ளது

நிரந்தரம்மின்றி தவிக்கிறது

வார்த்தைகளால் நம்மை

ஆட்கொள்ளும் அவரது அறை

மவுனமொழி வீற்றுருக்கிறது

சுவரில் ஆணியடித்த சட்டத்தில்

மாமா மந்தகாசமாய் புண்ணகைக்கிறார்

மூக்கு கண்ணாடி தூசி படிந்து

மேசையில் தூங்குகிறது

ஹாங்கரில் உரித்துபோட்ட தோலாக

அவரது சட்டைதொங்குகிறது

கதவில் அறைந்த ஆணியில்

வண்டிச்சாவி ஆடுகிறது

எல்லாமே மாறிப்போயுள்ளது

நிரந்தரம்மின்றி தவிக்கிறது

அரங்கில் காலி மதுக்குடுவைகள்

கண்ணாடி ஜடங்களாக

வரிசையில் நிற்கின்றன

பருகி வைத்த கோப்பையில்

உதடுகளின் ரேகைகள்

ஆவனமாக பதிந்துள்ளது.

எல்லாமே மாறிப்போயுள்ளது

நிரந்தரம்மின்றி தவிக்கிறது

No comments: