எண்ணித் துணிக் கருமம் துணிந்தபின்
எண்னுவம் என்பது இழுக்கு.
வனவாசம் போன கதை...
இன்னொரு தடவை மாமா திடீர்ன்னு எங்க வீட்டுக்கு வந்தாங்க, தலையை மொட்டை அடித்திருந்தாங்க. மாமா அழுக்கு சட்டையும் வேட்டியும் கட்டியிருந்தாங்க ரொம்ப பதட்டமவும் இருந்தாங்க. அம்மா இது என்னடா வேசம்ன்னு திட்டிகிட்டே குளிக்க சொல்லி, கிட்ட இருந்து சாப்பாடு போட்டாங்க. ஏன்டா இப்படியெல்லாம் செய்றன்னு எங்க அம்மா ரொம்ப வருத்தபட்டாங்க, அப்போது மாமா தலைகுனிஞ்சே இருந்தாங்க. அக்கா நான் இதுக்கு காரணம் இல்லை,என்னை சிலர் ஏமாத்திட்டாங்கன்னு சொன்னாங்க.டேய் இதெல்லாம் விட்டுட்டு நீ ஊர்ல போய் அப்பாவுக்கு டைப் ஆபீசில் ஒத்தாசையாக இருடான்னு அட்வைஸ் பண்ணினாங்க.அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போன பின்பு நாங்க மாமாவிடம் கதை கேட்டோம்.
மாமா பயங்கரமா என்னவெல்லாமோ சொன்னாங்க ஆனா ஒன்னுமே எங்களுக்கு புரியல்ல.அதுல ஒன்னுமட்டும் இன்னும் ஞாபகத்தில் இருக்கு. மாமாவுக்க கூட நிறைய பேர்கள் சேர்ந்து எங்கோ பஸ் பிடிச்சு போனார்களாம் அவங்களுக்கும் மாமாவின் நண்பர்களுக்கும் சண்டை வந்திருச்சாம் பிறகு மாமாவும் நண்பர்களுமா எங்கெல்லாமோ ஓடினாங்களாம், மாமா காட்டுல ஒரு மரத்துக்க அடியில ராத்திரி ஒளிஞ்சிருந்தப்ப பெரிய முள்ளம்பன்றி மாமாவை துரத்திச்சாம். வாய் பிளந்து கதை கேட்ட நாங்க மாமாவிடம் கேட்ட கேள்வி முள்ளம்பன்றிக்கு முள் இருந்திச்சான்னு ? அது உங்களை முள் வச்சி குத்திச்சா மாமான்னு கேள்வி கணைகளை தொடுத்தோம்.மாமா சளைக்காமல் பல புருடாக்களை அவிழ்த்து விட்டாங்க.பின்னாளில் தெரிந்தது மாமாவும் நண்பர்களும் ஏன் ஓடினார்கள் என்று.ஒரு பஸ்சை பிடித்து ஊர்ல நிறைய மக்களை டூர் கூட்டிட்டு போறோம்ன்னு அழைச்சுட்டு போனார்களாம் ஆனால் மாமாவின் நண்பர்கள் சிலர் பணத்தோட எஸ்க்கேப் ஆகிட்டாங்களாம் பிறகு வேறு வழியில்லாமல் மாமாவும் வேறு சில நண்பர்களும் எஸ் ஆகி தப்பிச்சாங்களாம்.இது தான் மாமா காட்டில முள்ளம்பன்றிக்க கூட வாழ்ந்த கதை.எங்களையெல்லாம் சுத்தி உக்கார வச்சுகிட்டு மாமா காட்டை பற்றி சொன்ன கதையும்,விதமும் அந்த சின்ன வயசுல காடு என்ற பிரமிப்பை மனசுல பதியம் போட்டிருந்தது.
ஊருக்குபோன மாமா தாத்தாவிடம் பேசி ஒரு டைப்ரைட்டரையும் மேசையும் கேட்டு வாங்கி நல்ல பிள்ளையாக ஆக்ட் கொடுக்க, குழித்துறை கோர்ட்டுக்க பக்கம் கடையெடுத்து டைப் ஆபீஸ் போட்டு கொடுத்தாங்களாம் தாத்தா.அங்கேயும் மாமா ஒழுங்கா போகல.
அதில தாத்தாவுக்குதான் பணக்கஸ்ட்டமும் மன வருத்தமும் ஏற்பட்டிருச்சு.இந்த பிரச்சனைக்க பிறகு மாமா ரொம்ப நாள் நெல்லையில எங்க வீட்டுல இருந்தாங்க.அப்போது மாமாவின் இன்னொரு திறமைய பார்க்க வாய்ப்பு ஏற்பட்டிச்சு.எங்கவீட்டில அப்போதுதான் ஒரு தையல்மிசின் எங்க அம்மா வாங்கியிருந்தாங்க அதுக்கு மூடி செய்ய மாமாவிடம் அம்மா சென்னாங்க.மாமா பிளைவுட், சட்டம்,ஆணி,மரம் எல்லாம் வாங்கிட்டு வந்து,ஒருவாரமா நல்ல தத்துரூபமா அழகான ஒரு மூடியை செய்தாங்க. அந்த பெட்டியை செய்ய எடுத்துகிட்ட சிரமமும் சுறுசுறுப்பும் இன்றும் என்னுள்ளே பசுமையாக இருக்கு.இன்னைக்கு நான் புதியதாக ஏதாவது செய்யவோ அல்லது, படைப்பாற்றல் சம்மந்தமாக ஒரு முற்சியில் ஈடுபடும்போது அந்த காலத்தில் மாமாவிடம் நான் கண்ட அந்த வேகமும், ஈடுபாடும் நேர்த்தியும் என்னுள்ளே ஒரு உத்வேகமாக உருவெடுக்கும்.
மற்றுமொரு மனவெளியுடன் சந்திப்போம்.....
No comments:
Post a Comment